நான்காம் மற்றும் ஐந்தாம் நாள்

 பயணம் தொடங்கிய முதல் நாள் எதுவுமே தெரியாது. எந்த வலியும் இருக்காது. கூடுதலாக கூட சில கிலோமீட்டர்களை நடந்து கடந்து விட்டோம். இரண்டாம் நாள் காலை தான் அதன் விளைவு தெரிந்தது. சுமைகளை தூக்கியதில் தோள்பட்டையில் தொட்டால் ஒரு சின்ன வலி இருந்தது. பாதம், முட்டிக்கு கீழ் வலிப்பது போல் இருந்தது, ஆனால் பெரிய வலியில்லை. அன்றும் சில கிலோமீட்டர்கள் கணக்கிட்டதை விட கூடுதலாக நடந்திருப்போம். இரண்டாம் நாள் மாலை பிடித்தது வலி. தோள்பட்டையில் ரத்தம் கட்டிவிட்டது. படுக்கவே முடியவில்லை. எப்படி திரும்பி படுத்தாலும் வலித்தது. 482 டிகிரி கோணத்தில் படுத்தால் கூட வலி துளி கூட குறைந்தபாடில்லை. காலும் வலி எடுக்க தொடங்கியது. தொடை உரைந்து உரைந்து எனக்கு தோல் உரிந்து விட்டது. அகட்டி அகட்டி வைத்தே நடக்க முடிந்தது. அன்றைய இரவு செஞ்சேரியில் ஒரு வலி மிகுந்த இரவாக இருந்தது. 


அதிகபட்சமாக அன்று மூன்று மணி நேரம் தான் தூங்கியிருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால், காலை எழும் போது வலி பெரும்பகுதி குறைந்துவிட்டது. பழைய புத்துணர்வு வந்துவிட்டது. விரைவாகவே நடந்தேன். முந்தைய நாள் இரவு மூவ் ஆயில்மண்ட் போட்டதால் பழைய தோள்பட்டை வலி நீங்கிவிட்டது. ஆனால் புதிதாக கெண்டைக் கால் வலி வந்துவிட்டது. பாதமும் வலிக்கத் தொடங்கியது. கெண்டை பிடித்தால் சில கணங்கள் எப்படி உயிர் போகும் வழி இருக்குமோ அப்படி தான் அந்த கெண்டைக்கால்களும் வலித்துக் கொண்டு இருந்தன. நடந்து கொண்டே இருக்கும் போது தெரியவதில்லை. ஒரு கணம் உக்கார்ந்து விட்டால் மீண்டும் எழுந்து நடப்பது என்பது மலையை பிறட்டும் காரியம் தான். 10 மீட்டர் நடப்பதே நீண்ட தூரமாக மனம் உணரும், அதற்கு பெரும் போராட்டமாக இருந்தது. அந்த 10 மீட்டரை கடந்து விட்டால் மீண்டும் பழையபடி நடந்துவிடலாம். 


ஆனால் காலை எழுந்தால் எப்போதுமே புதிய மனிதனாக உணர்வோம். "அப்பா எல்லாம் சரியாகிருச்சு.. இன்னைக்கு பாரு டா நா நடக்கறத" என்று துள்ளி குதிப்போம். நண்பர்களிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வேன். மீண்டும் ஓய்வு நேரத்தில் தான் அந்த வலி எழுந்து வரும். மதியம் ஓய்வுக்கு எதாவது ஒரு இடத்தில் ஒதுங்குவோம். அதுவரை வேகமாக எந்த சிக்கலும் இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த கால்களை நின்றவுடன் அகட்டி வைத்து நொண்டி நொண்டி தான் செல்ல வேண்டும். நான்காம் நாள் ஜனவரி 14 ஆம் தேதி மதியம் என்னுடைய வலது கெண்டைக்கால் வலியில்லை, இடது கெண்டைக்கால் மட்டும் வலித்தது. உடல் ஒவ்வொரு வலிக்கும் பழகி அதற்கு தகவமைத்துக் கொண்டு புதிய வலியை தரத் தொடங்குகிறது. அன்று மதியம் எடுத்த ஓய்வில் உடம்பு முழுக்கவே புத்துணர்ச்சி அடைந்துவிட்டது. அனைத்து வலியும் நீங்கி விட்டது. அன்று தான் அனைவருமே வேகமாக நடந்தோம். திட்டமிட்ட நேரத்தை விட விரைவாகவே தங்குமிடத்திற்கு சென்று விட்டோம். 


ஈரோடு கிருஷ்ணன் ஐந்து நாள் கர்நாடக, ஆந்திரா பயணம் முடித்து வந்த கையோடு எங்களை பார்க்க கிளம்பி வந்துவிட்டார். ஜனவரி 13 நள்ளிரவு 2 மணி வாக்கில் வந்து சேர்ந்தவர் ஜனவரி 14 காலை அழைத்து நான் உங்களை பார்க்க வருகிறேன் எதாவது வேண்டுமா என்று கேட்டார். நாங்கள் 14 ஆம் தேதி மதியம் தேர்பாதை என்ற ஊரில் ஓய்வெடுத்து விட்டு தாராபுரம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். அவர் எங்களுடன் இணைந்து கொஞ்ச தூரம் நடப்பதாக சொன்னார். ஆனால் ஈரோட்டில் இருந்து அவர் கிளம்பி காங்கேயம் வருவதற்கே வெகு நேரம் ஆகிவிட்டது. பழனி பாதயாத்திரை கோஷ்டி சாலை முழுவதும் அடைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தனராம். இவர்கள் வரும் வழியில் சில சில அங்குலங்களாக நகர்ந்து வந்துள்ளனர். வண்டி ஓட்டி ஓட்டி களைத்து விட்டனர். இவர் அருகில் அமர்ந்தே களைத்து விட்டார். எப்படியும் அவர்கள் வந்து இணைய முடியாது என்று தெரிந்துவிட்டது. அவரும் அவ்வாறு தான் நினைத்துக் கொண்டு நாங்கள் தங்கும் இடத்திற்கு நேராக வந்து விடுவதாக சொன்னார். 


நல்ல வேளையாக எங்கள் சாலையில் ஒரு கூட்டமும் இல்லை. வெக்கிடு வெக்கிடு என்று நடந்து கொண்டிருந்தோம். அர்ச்சனாவும், அனுவும் குட்டியாக இரட்டைக் குழந்தைகள் போல்  இருந்தார்கள்.‌ அவர்கள் நடப்பது அழகாக இருந்தது. பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டே நடந்து கொண்டிருப்போம். எப்போதும் எங்களுக்கு முன்பு நடக்க ஆரம்பித்து அரை கிலோ மீட்டர் அல்லது ஒரு கிலோமீட்டர் முன்னால் சென்று கொண்டிருப்பார்கள, பிறகு நாங்கள் சென்று அவர்களை பிடித்து அனைவரும் ஒன்றாக கொஞ்ச தூரம் நடப்போம். அதன்பிறகு நாங்கள் முந்தி சென்று எங்களுக்கு ஒரு கிலோ மீட்டர் பின்னால் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களை பார்த்தால் எங்களை பிடிப்பதற்காக மிக வேகமாக நடப்பது போல் தோன்றும் ஆனால் அதே இடத்தில் இருந்து கொண்டிருப்பார்கள். குட்டி குட்டியாக கால்களை எடுத்து வைத்து அவர்கள் கடுமையாக முயற்சிப்பது அத்தனை அழகாக இருக்கும். இரண்டு பொம்மைகள் உடன் நடந்து வந்து கொண்டிருப்பது போல் இருக்கும். 


அர்ச்சனாவிற்கு தட்டைக் கால். அதை ஈடு செய்ய காலணியில் ஏதேதோ வாங்கி சொருகியிருப்பாள். நான் தொடர்ச்சியாக வீட்டில் நடைபயிற்சி செய்வேன். எனக்கே உடல் வலி கடுமையாக இருந்தது. இவர்களுக்கும் அதை விட அதிக வலி இருந்திருக்கும்.இத்தனைக்கும் நான் இயன்றவரை பையில் எடைகளை குறைத்து கொண்டுவந்துள்ளேன். ஆனால் அர்ச்சனா தன்னுடைய பையிற்குள் ஒரு குட்டி மளிகைக் கடையையே வைத்திருந்தாள். ஒரு டஜன் கைக்குட்டை, துணி துவைக்கும் பிரஷ், நான்கு செட் துணி, அது அல்லாமல் இரண்டு செட் துணி. கேட்டால் அது ரஃப் யூஸ்க்கு (Rough use) என்று சொல்லுவாள். இன்னும் மேக்கப் ஐட்டங்கள் ஒரு கிலோ இருக்கும். எதாவது தேவையில்லை என்றால் கொடுத்துவிடு என்று சொன்னால் அனைத்தும் வேண்டும் என்பாள். அவள் எடைகளை நாங்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டு வந்தோம். எதோ என்னால் முடிந்தது ஒரு கைக்குட்டையை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். எதாவது தின்பண்டங்கள் வைத்திருந்தால் அவற்றை எடுத்து தின்று எடையை குறைத்துக் கொடுத்தேன். அந்த பையை தூக்கிக் கொண்டு சிக் சிக்கு என்று கோழிக் குஞ்சு போல் நடந்து வருவாள். இந்த பயணத்தில் எனக்கு ஒரு அழகான குட்டி தங்கச்சி கிடைத்தது என்று பார்த்து மகிழ்ந்து கொண்டேன். 


நாங்கள் செல்லும் வழியில் சில ஊர்களில் பொங்கலுக்கான போட்டிகள் எல்லாம் நடத்திக் கொண்டு இருந்தார்கள். பாட்டுப் போட்டி என்று மைக்கில் அறிவித்ததும் அய்யோ முடிஞ்சோம் என்று நினைத்து கால் வலியெல்லாம் மறந்து, தெரிந்து ஓடி கடந்தோம். அப்போது அனுவை ஒருவர் பார்த்து எதற்காக நடத்து செல்கிறீர்கள் என்றெல்லாம் விசாரித்து சென்றார். கிருஷ்ணன் அவர்களுக்கும் ஒருவழியாக சாலையில் இடம் கிடைத்து விரைவாக நாங்கள் தங்குமிடத்தை அடைவதற்கு ஐந்து கிலோ மீட்டர் முன்பே எங்களுடன் வந்து இணைந்து கொண்டார். அங்கிருந்து பேசிக்கொண்டே எங்களுடன் தங்குமிடம் வரை நடந்துவந்தார். அவர்கள் சென்ற பயணத்தில் பார்த்த இடங்கள், விலங்குகளை பற்றி சொன்னார். 


எங்கள் முதுகுப்பைகளை வாங்கி காரில் போட்டுக் கொண்டு கிருஷ்ணன் அவர்களின் நண்பர் வக்கீல் ஆனந்த் ராஜ் எங்கள் தங்குமிடத்திற்கு வந்துவிட்டார். திடீரென்று எடையில்லாமல் நடப்பது பொசுக்கென்று இருந்தது. காற்றே எங்களை அடித்துச் செல்வது போல் இருந்தது. அன்று இரவு தாராபுரத்தில் அருள் ஜோதி அஸ்ரமம் என்று ஒரு வள்ளலார் ஆஸ்ரமத்தில் தங்கினோம். லிங்கராஜ் என்ற நண்பர் எங்களுக்கு இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அன்று மதிய உணவும், இரவுணவும் அவர் தான் ஏற்பாடு செய்து கொடுத்தார். நானும் கௌதமும் இன்னொருவர் அறையில் தங்கினோம். அப்போது அந்த அறையில் ஒரு டப்பாவில் மூன்று நிலக்கடலை மிட்டாய் இருந்தது. அதை எடுத்து வாயில் போட்டுக் கொண்டோம். 


ஜனவரி 15 காலை தாமதமாகத்தான் கிளம்பினோம். பேக்கரியில் டீ, காபி எல்லாம் குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்புவதற்கு கிட்டத்தட்ட எட்டு மணி ஆகிவிட்டது. கொஞ்ச தூரம் நடந்ததுமே ஒருவர் எங்களை நிறுத்தி எங்கு செல்கிறீர்கள், எதற்காக செல்கிறீர்கள் என்று விசாரித்தார். இந்த நடைபயணத்தின் நோக்கத்தை முழுவதுமாக நான் விளக்கினேன். கேட்டு முடித்துவிட்டு நல்ல காரியம் தான், ஆனா எவன் கேப்பான் என்றார். கேட்பார்கள், ஏற்கனவே ஒரு ஊரில் இது போல் பிரச்சாரம் செய்துள்ளோம். பெரும்பாலானவர்கள் மாறியுள்ளனர், கேட்பார்கள் என்று நம்பி தான் இவ்வளவு தூரம் நடக்கிறோம் என்று சொன்னேன். 


"சேரி, சேரி காந்தி படம் போட்டு நடந்து போனீங்களா அதான் கேட்டேன். அந்தாளு மோசமான ஆளாச்சே.." என்றார். எதன் அடிப்படையில் மோசமானவர் என்கிறீர்கள்? காந்தி குறித்து எதாவது படித்துள்ளீர்களா? என்று கேட்டேன். 


யூட்டியூப்பில் பார்க்கிறோம், மற்றவர்கள் சொல்லி கேள்விப் படுகிறோம். அதிலிருந்தே தெரிகிறது. நேதாஜி பற்றி உங்களுக்கு தெரியுமா என்றார். நேதாஜி பற்றியெல்லாம் தெரியும், காந்தி மோசமானவர் என்று எதாவது எழுத்தை, புத்தகத்தை படித்துள்ளீர்களா என்று கேட்டேன். யூட்டியூப்பில் பார்க்கிறோமே என்று மீண்டும் அதவே சொன்னார். முதலில் எதாவது ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு அதன் பிறகு பேசுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். 


அனு பின்னால் வந்து கொண்டிருந்தாள். கொஞ்ச தூரம் சென்றதும் ஒருவர் அவளை நிறுத்தி விசாரித்துள்ளார். எங்கள் நடைபயணம் குறித்து அறிந்து எங்களுடன் ஒரு கிலோமீட்டர் நடந்துவந்து டீ வாங்கி கொடுத்துவிட்டு வருவதாக சொல்லியுள்ளார். நாங்கள் இப்போது தான் குடித்தோம் இன்னும் 10 கிமீ கடந்து தான் மீண்டும் குடிப்போம் என்று அனு அவரிடம் சொல்லியுள்ளாள். அவர் உடனே சேரி வாங்க அங்க போய் வாங்கி தருகிறேன் என்று உடன் நடக்கத் தொடங்கிவிட்டார். கூகுள் மேப்பில் பார்த்தால் முதலில் ஒரு ஊரிற்குள் சென்று வரும்படி காட்டியது. நாங்கள் அதில் செல்லப் போகும் போது அவர் தடுத்து மெயின் ரோட்டிலேயே போகலாம் அது ஊருக்குள்ள போய் இங்க தான் வருகிறது என்று அழைத்தார். நாங்கள் யோசித்து பார்த்துவிட்டு அவர் சொன்ன வழியிலேயே சென்றோம். மீண்டும் அரைக் கிலோமீட்டர் சென்றவுடன் இன்னொரு ஊருக்குள் வழி சென்றது. அவர் அதுவும் வேண்டாம் நேர்வழியில் செல்லலாம் என்றார். நாங்கள் இம்முறை அவரை இந்த வழிக்கு அழைத்தோம். இருவரும் மாறி மாறி வெவ்வேறு வழிக்கு அழைத்துக் கொண்டே இருந்தோம். கடைசியில் நாங்கள் ஊர் வழியாகவும் அவர் நெடுஞ்சாலை வழியாகவும் நடக்கத் தொடங்கினோம். அவர் வாங்கித் தருவதாக சொன்ன டீயை குடிக்க முடியாமலே போய்விட்டது.‌


ஈரோடு பிரபு மற்றும் அவரது மனைவி பவித்ரா இருவரும் தஞ்சாவூர் செல்கிறார்கள். செல்லும் வழியில் எங்களுக்கு தேவையான பொருட்கள், காலை உணவு போன்றவற்றை வாங்கி வந்து எங்களுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பினார்கள். 

நேற்றுவரை இருந்த நிலப்பரப்பு மனிதர்கள் எல்லாமே இன்று மாறத்தொடங்கியது. நேற்றுவரை தென்னந்தோப்புகளுக்கு நடுவில், பம்புசெட்டுகளுக்கு நடுவில், வயல்களுக்கு நடுவில், காற்றாலைகளுக்கு நடுவில், குளிர்ச்சிக்கு நடுவில், போக்கவரத்தற்ற ஊர்ச்சாலைகளில் நடந்து சென்று கொண்டிருந்தோம். இன்று அந்த தோப்பு, பம்பு செட்டுகள் அற்ற ஒரு வறட்சி அப்பட்டமாக கண்களில் புலப்படும் வெட்டவெளிகளின் ஊடாக, கருவேல முள் மரங்கள் சூழ, நொடிக்கு நொடி வாகனங்கள் சீறிக்கொண்டிருக்கும் நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம். வெயிலின் தாக்கத்தை இன்று தான் உணர்ந்தோம். தண்ணீர் தீர்ந்து போய், நா வறண்டு ஒரு பாலைவனத்தில் நடப்பது போல் இருந்தது. வீடுகள், மரங்கள் என ஒதுங்குவதற்கு எதுவும் இல்லை. இடைவிடாது நடப்பது ஒன்றே வழி. அர்ச்சனா, அனு, சரண்யா ஆகியோர் நடக்கவே முடியாமல் ஆனார்கள். சாலை ஓரங்களில் கால்கள் நீட்டி சில நேரம் அமர்ந்தோம். இன்று தான் அதிக தடவை நின்று நின்று சென்றோம். 

அர்ச்சனா, லைலா பானு

நேற்று அனுவை வேறு ஊரில், வழியில் நிறுத்தி விசாரித்தவர் இன்று இந்த வழியாக வந்தார். மீண்டும் அவர்களை பார்த்து இங்க தான் போயிட்டு இருக்கீங்களா என்று விசாரித்துவிட்டுச் சென்றார். நாங்கள் சிலர் முன்னால் சென்றுவிட்டோம் சரண்யா, அர்ச்சனா, லைலா பானு மட்டும் பின்னால் வந்து கொண்டு இருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களிடம் வண்டியை கொண்டுவந்து நிறுத்திவிட்டு விசாரித்துள்ளார். இவர்கள் முழுவதும் விளக்கியதில் அவர் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு ஒரு தொகையை அளிக்க விரும்பியுள்ளார். உடனே இவர்கள் அதை பேசாமல் பெற்றுக் கொள்வதை விட்டுவிட்டு நோட்டீஸை கொடுத்து இதில் "எங்கள் தலைவரின்‌ எண் உள்ளது அவரிடம் பேசி அவருக்கு அனுப்பி விடுங்கள்" என்று என்னுடைய எண்ணை அளித்துள்ளனர். அவர் உடனே "தலைவருக்கெல்லாம் கொடுத்தால் அவர் பாக்கெட்டில் போட்டுக் கொள்வார்கள். நான் உங்களுக்கு தான் கொடுக்க விரும்புகிறேன்" என்று சொல்லியுள்ளார். அவருடன் இரண்டு சிறுவர்களும் வந்துள்ளனர். அவர்கள் முனை அமைப்பின் இன்ஸ்டா பக்கம், வலைப்பூ ஆகியவற்றை தேடி பின்தொடந்துள்ளனர். அந்த நபர் அவருடைய எண்ணை அளித்து விட்டு நம் பெண்களின் எண்ணை பெற்றுச் சென்றுள்ளார். 

இன்னொரு இளைஞர் குழு எங்கேயோ பயணத்திற்கு‌ செல்பவர்கள் எங்களை பார்த்து விசாரித்து எங்களை பிடித்து போய், எங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். 

எங்களுக்கு மதிய உணவு சாலக்கடை என்னும் ஊரைத் தாண்டி சுவை பேக்கரியில் முந்தைய நாள் எங்களுக்கு உதவிய லிங்கராஜ் அவர்களின் உறவினர் பாலு கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். அந்த பேக்கிரியில் கொஞ்ச நேரம் அமர்ந்து தேவையான திண்பண்டங்களை வாங்கிக் கொண்டோம். அங்கிருந்து மூன்று கிலோமீட்டரில் பாலு கிருஷ்ணன் அவர்களின் வீடு இருந்தது. அங்கு சென்று ஓய்வெடுக்கும் படி சொன்னார். உணவை அங்கு கொண்டு வருவதாக சொன்னார். அந்த வீட்டிற்கு சென்று ஐந்து மணி வரை ஓய்வெடுத்தோம். 

அவர் வீட்டில் இருந்த கைத்துக் கட்டிலை போட்டு படுத்துக் கொண்டு மேலே தென்னை ஓலைகளின் அசைவை பார்த்துக்கொண்டு இருக்கும் போது இளமையான காற்று மெல்ல வருடிக் கொடுத்தது. அப்படியே எங்களை அறியாமல் மெது மெதுவாக அந்த அசையும் ஓலை மறையத்தொடங்கியது. கண் சொருகி மூடி பிரஞ்ஞை மறைந்தது. உடல் முழுக்கவே அந்த குளுமை படர்ந்தது. 


தக்காளி சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய், தயிர் பாக்கெட் எல்லாம் அந்த சுவை பேக்கரி உரிமையாளர் செல்வன் என்பவர் கொண்டு வந்து கொடுத்தார். அருகில் உள்ள வாழை மரத்தில் இலை அறுத்து சாப்பிட்டுக் கொள்ளும்படி ஒரு கத்தியும் கொண்டுவந்து கொடுத்தார். நல்ல உணவு. 


நாங்கள் கிளம்பும் போது இன்றும் கிருஷ்ணன் வந்தார். உடன் அனந்த குமாரும் வந்தார். சபரீஷ் திண்டுக்கல்லில் இருந்து வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். அனைவரும் நடக்கத் தொடங்கினோம். இரண்டரை கிலோமீட்டர் எங்களுடன் கிருஷ்ணன் நடந்து வந்தார். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக நடப்பது இல்லை. குறைந்தபட்சம் மூன்று குழுக்களாக பிரிந்து முன் பின்னாக நடந்து கொண்டிருப்போம். கிருஷ்ணன் வந்தால் மட்டும் அனைவரும் ஒன்றாக நடந்து வருவோம்.‌ அவர் பேசுவதைக் கேட்டு வெடித்துச் சிரித்துக் கொண்டு நடந்து வந்தோம். இரண்டரை கிலோமீட்டரில் அவர்கள் திரும்பினார்கள். சரண்யாவும் எங்களிடம் இருந்து விடைபெற்று அவர்களுடன் திரும்ப உள்ளார். இன்று நாங்கள் 100 கிமீ நடந்து பூர்த்தி செய்யப் போகிறோம். அவர் அதை முடித்துவிட்டு போக வேண்டும் என்று என்னென்னவோ கணக்குப் போட்டுக் கொண்டு இருந்தார். இரண்டையும் ஒன்றையும் கூட்டினால் நான்கு என்றெல்லாம் கணக்கு போட்டு அந்த நூறை கடக்க முயன்றுகொண்டிருந்தார். "நான் நூறு கிமீ நடந்து விட்டேன் நீ அவ்வாறு தான் எழுத வேண்டும்" என்று என்னை மிரட்டி கொண்டு இருந்தார். 99 கிமீ தான் நடந்தீர்கள் என்று நான் கேலி செய்து கொண்டு இருந்தேன். அவர் மிரட்டலுக்கு பயந்து இல்லை, உண்மையாகவே கடந்திருப்போரோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் நூறு கிமீ கடந்து விட்டார் என்று சொல்லிக் கொள்கிறேன். 


இன்று இரவு கள்ளிமந்தையத்தில் இரவு தங்கல். முன்பு என்னுடைய உறவினர் மூலம் இங்கு தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தேன். அது கள்ளிமந்தையம் தாண்டி சில கிமீ செல்ல வேண்டும் என்றார். பின்னர் பேட்டைக் காளி பாளையம் தலைவர் குமரேசன் அவர்களின் நண்பர் விஜய் என்பவர் எங்களுக்கு இங்கு அம்மன் திருமண மண்டபம் என்று ஒரு மண்டபத்தில் இரவு தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார். அதை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது சபரீஷ் மற்றும் அனு நீதிபதியின் உரிமைகள் குறித்து பேசத் தொடங்கினர். அனு நீதிபதிக்கு பெரிய அளவு சுதந்திரம் இருக்காது அவர் நெருங்கிய உறவினர்கள் வீட்டு விசேசத்திற்கு மட்டும் தான் செல்ல வேண்டும், யாரிடம் அழைபேசியில் பேசுகிறார்கள் என்று கூட அரசு ஒட்டுக் கேட்கும் என்றெல்லாம் சிலவற்றை அவளுக்கு அவளுடைய பேராசிரியர் சொன்னதாக சொன்னாள். சபரீஸ் அதை மறுத்து நீதித்துறையின் தன்னிச்சை தன்மை குறித்தும், ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் குறித்தும், தனியுரிமை குறித்தும் பேசத் தொடங்கினான். அப்போது சௌமியா UPSC எழுதுவதற்கு தயாராகிறீர்களா என்று கேட்டாள். ஆம் என்று சொல்லிவிட்டு அப்படியே பேசியதை நிறுத்திவிட்டான். "அவரு ஏதோ சொல்ல வந்தாரு குறுக்க பூந்து பேசி சொல்ல விடாம பண்ணீட்ட" என்று கௌதம், சௌமியாவை பார்த்து சொன்னான். மீண்டும் பேச சொல்லிய போது சபரீஷ் தனியுரிமை குறித்து சட்டங்கள் வாரியாக அடுக்கி, அவசர காலத்தில் எது கைவிடப்படும், எந்த காலத்திலும் மாற்ற முடியாதது எது என்று ஒரு முழு சித்திரத்தை அளிக்கும் படியான ஒரு உரையை நிகழ்த்தினான். அனு திறன் பேசியை எடுத்து இன்னும் எவ்வளவு கிமீ செல்ல வேண்டும் என்று பார்த்தாள். 


கவனிக்கவில்லை என்றால் பேசமாட்டேன் என்று அவன் சொல்லிவிட்டான். இல்ல எவ்வளவு தூரம் என்று தான் பார்த்தேன் என்று அனு சொன்னாள். அது தான் பார்க்க கூடாது என்று கவனித்தலின் அடிப்படை என்று ஜெயமோகன் சார் பேசிய உரையை அப்படியே திரும்பி பேசினான். இன்னும் சில உதாரணங்களை சேர்த்து சொன்னான். அவனுடைய உரை மிகத்தெளிவாக, அடுக்கடுக்காக, ஒரு வடிவத்திற்குள் இருந்தது. அபாரமான உரை. தூரன் விழாவில் ஜெயமோகன் சார் ஆற்றிய உரையை சுருக்கி அவர் சொல்லிய அடுக்கில் அப்படியே திரும்ப சொன்னான். நான் என்னை விட வயது  குறைந்தவர்களை பார்த்து வியந்த தருணம் மிகக் குறைவு. 


பத்தாம் வகுப்பு வரை நான் இரண்டு பள்ளிகளில் படித்தேன். அதுவரை இரண்டு பள்ளிகளிலும் சதுரங்கத்தில் நான் தான் சிறப்பாக விளையாடுவேன். அனைவரும் என்னிடம் தோற்றுவிடுவார்கள். என்னை விட வயது மூத்தவர்களை கூட தோற்கடிப்பேன். அந்த வயதில் அது ஒரு பெரிய கர்வமாக இருக்கும். ஆனால் ஒருமுறை நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது வெளியே ஒரு போட்டிக்கு சென்றிருந்தேன். அப்போது ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன் என்னை எளிதில் தோற்கடித்து விட்டான். அவனை கண்டு அப்போது ஒரு பெரும் வியப்புக்குள்ளானேன். அதன் பிறகு இன்று தான். சபரீஷ் அவன் வயத்தில் ஒரு ஆளுமை தான். அவன் ஆளுமை வெளிப்பட்ட தருணமாக இன்று தான் அவனை பார்க்கிறேன். 

கள்ளிமங்களம் விஜய்யுடன்

சுமார் ஏழரை மணி வாக்கில் மண்டபம் வந்து சேர்ந்துவிட்டோம். விஜய் வந்தார், உடன் மண்டப உரிமையாளரும் வந்தார் பார்த்து பேசினோம். சிவராஜ் அண்ணா சொல்லி உமையாள் என்பவர் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவர் திண்டுக்கல்லில் தான் இருக்கிறார். எதாவது உதவி வேண்டுமா உணவு கொண்டு வரட்டுமா என்றார்.‌ இரவுணவு ஏற்கனவே விஜய்யிடம் சொல்லி இருந்தோம். ஆனால் இன்று பொங்கல் என்பதால் கடைகள் இல்லை. ஒரு பூசாரி செய்து தருவதாக சொன்னார், அவர் வந்து செய்வதற்கு தாமதமாகும் என்றார். உமையாளிடம் சொன்னோம். அவர் நான் வந்து உணவு தருகிறேன் என்று ஒற்றைக் காலில் நின்று கொண்டு வந்தார். திண்டுக்கல்லில் இருந்து 43 கிமீ, ஒரு மணி நேரம் பயணித்து எங்களுக்கு சாப்பாடு வாங்கி வந்தார். அவருடன் அவருடைய கணவன் தேனப்பன், மகன் அருணாசலம் இருவரும் வந்தார்கள். எங்களைப் பற்றி, அமைப்பை பற்றி, அறக்கல்வி பற்றி எல்லாம் விசாரித்தார்கள். அறம் என்றால் என்ன என்று தேனப்பன் கேட்டார். சபரீஷ் நான் சொல்கிறேன் என்றான். அறத்தை வரலாற்றுடன் இணைத்து இன்று வளர்ந்து வந்திருப்பதை பற்றி பேசினார். தெளிவான உரை. உமையாள் குடும்பம் கிளம்ப இரவு 11 மணி ஆகிவிட்டது.


மீண்டும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உமையாள் நாளை காலை உணவும், மதிய உணவும் கொண்டு வருவதாகவும் சொலீலியுள்ளார். திண்டுக்கல்லுக்கும் இங்கேயேயும் அவர் சென்று வருவதே 400 கிமீ வந்து விடும் என்று நினைத்துக் கொண்டேன். 

உமையாள் மற்றும் குடுப்பத்தினர்

சபரீஷ் பேசும் போது நண்பர்கள் சிலர் அதை கேட்க முடியாமல் முன்னால் சென்று விட்டார்கள். இந்த புத்தாண்டின் போது வெள்ளிமலையில் கிருஷ்ணன் சொன்னார். ஒன்றை கவனிக்க வேண்டும் என்றால் அதை கவனிக்காமல் இருப்பதற்கான வேலைகளை செய்யத் தொடங்கிவிடுவார்கள். உள்ளத்தை குவிப்பதில் இருந்து தப்புவதற்கு முயன்று கொண்டே இருப்பார்கள் என்றார். இன்றும் அவ்வாறு தான். நானும் பல நேரங்களில் அவ்வாறு செய்துள்ளேன். யோசித்து பார்த்தால் மேலே சொன்ன உடல் வலிகள் அனைத்தையும் தாண்டி இந்த உள்ளத்தை குவிக்க வேண்டும் என்ற வலியை தான் பெரும்பாலானவர்களால் தாங்க முடிவதில்லை. உடல்வலியை கடப்பது எளிது தான் போலிருக்கிறது. 


சிபி


மேலும்..




Comments

  1. உடல்~உள்ளம் குவித்தல் என புறத்தையும்~அகத்தையும் வலியில் தொடர்புப் படுத்திய விதம், உங்கள் வயதுடையோரின் சராசரி அனுபவம் கடந்த ஞானம்.
    அகம் வளர்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

400 கி.மீ நடைபயணம்

ஏழாம் நாள்

அறப்போர் ஜெயராம் நேர்காணல்